காஞ்சிபுரம்: தமக்கு சொந்தமான நிலம் மோசடியாக விற்கப்பட்ட வழக்கில் நடிகை கவுதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். நடிகை கவுதமி, அவரது அண்ணன் காந்த் ஆகியோருக்கு சொந்தமான நிலம் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் உள்ளது.
இந்த நிலத்தை விற்பனை செய்ய கடந்த 2015-ம் ஆண்டு தன்னிடம் மேலாளராக இருந்த அழகப்பனுக்கு சுங்குவார் சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பவர் உரிமை கொடுத்துள்ளார்.
மேலாளர், நண்பர்கள் மோசடி: இந்த நிலையில் அழகப்பன் தனது நண்பர்களான ரகுநாதன், சுகுமாரன், பலராமன் ஆகியோருடன் சேர்ந்து மேற்படி சொத்துகளை அபகரித்து கொண்டு அதற்கு உண்டான பணத்தை கவுதமி மற்றும் அவர் குடும்பத்துக்கு தராமல் மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை கவுதமி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அழகப்பனை கைது செய்தனர்.
இந்த வழக்கு காஞ்சிபுரம் நடுவர் மன்றம் 1-ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சுகுமாரன் அண்மையில் உயிரிழந்துவிட்டார்.
இவர் பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்குவதற்கான ஆட்சேபம் குறித்த விசாரணைக்காக நீதிமன்றத்தில் இருந்து கவுதமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கவுதமி ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.