தமிழ்நாட்டை அடுத்து மகாராஷ்டிராவில் இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஆர்ப்பரித்துக் கிளம்பியதால் அம்மாநில அரசு மும்மொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. 2026 தேர்தலில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் பிரதான பிரச்சாரத்தை திமுக முன்னெடுக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், திமுக-வுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தமிழறிஞரும், தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவருமான கணையாழி ம.இராசேந்திரனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்தி வளர்ந்திருக்கிறதா இல்லையா?
இந்தி எதிர்ப்பு என்பதற்குப் பதிலாக இந்தித் திணிப்பு அல்லது இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லலாம். இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழியாக இருப்பதை எப்போதும் யாரும் எதிர்க்கவில்லை. இந்தியோடு அரசியல் ஆதிக்கம் சேரும் போதுதான் எதிர்ப்புக்கு உள்ளாகிறது.
இந்தியை வளர்க்கும் ஒன்றிய அரசின் அரசியல் முன்னெடுப்புகள் கூடிக்கொண்டே வந்தாலும் கூட இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் குறைந்துகொண்டேதான் வருகிறது. மொழி ஆதிக்க எதிர்ப்பு கூடிக்கொண்டேதான் வருகிறது. காரணம், மொழியோடு சமுதாய அரசியல், பண்பாட்டு ஆதிக்கத்தைச் சேர்ப்பதுதான். ஆதிக்கம் செலுத்தாத இணக்க வாழ்வுக்கு உரிய – ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கிற – வேறுபாடுகளை வளர்க்காத மொழிகளைக் கொண்டாடலாமே!
திமுக அரசியலில் தொடர்ச்சியாக தமிழ்மொழியும் இடம்பெறுவது குறித்து..?
மனித உரிமைகளின் பட்டியலில் மொழி உரிமைக்கும் ஐக்கிய நாடுகள் சபை இடம் தந்திருக்கிறது. மனிதர்களைப் போலவே மொழி, வாழவும் வளரவுமான உரிமைகளைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. சொல்லப் போனால், மனித உரிமைகளைப் பெறவும், காப்பாற்றவும், போராடவும் மொழி வேண்டும். மொழிக்கு உரிமை மறுக்கப்பட்டால் மனித உரிமைகள் மறுக்கப்படுவதாகப் பொருள். மொழி உரிமை என்பதில் அரசியல் வந்துவிடுகிறது.
எல்லா அரசியலுக்கும் மொழி தேவை. அப்படியான மொழிக்கு உரிமை மறுக்கப்படுவதிலும் அரசியல் இருக்கிறது. எதிர்த்துப் போராடுவதிலும் அரசியல் இருக்கிறது.உலக மொழி வரலாற்றில் தீண்டாமைக்கு ஆளான மொழி தமிழ். அதைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் பண்பாட்டுத் தீண்டாமைக்கு ஆளாகியிருந்தார்கள். அவற்றிலிருந்து தமிழையும் தமிழர்களையும் மீட்டெடுக்கும் அரசியலைத் திமுக தொடர்கிறது.
தமிழைப் போற்றியதில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பங்கைக் கூற முடியுமா?
இலக்கிய மாமணி விருது, விருதாளர்களுக்குக் கனவு இல்லம், அயலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள், நூல்கள் நாட்டுடைமை, தமிழ்ச் சங்கங்களுக்கு நிதியுதவி, பாரதி ஆய்வாளர்களுக்குப் பரிசுகள், கால்டுவெல் நூல் வெளியீடு, தமிழ்க் கணினி மாநாடு போன்று எண்ணற்ற தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை முதல்வர் முன்னெடுத்து வருகிறார். தமிழ் வளர்ச்சிக்கழகம் தொடர்ந்து செயற்பட ஏதுவாக வைப்புத் தொகையாக ரூ.2 கோடியும், இந்த நிதியாண்டுச் செலவுக்காக ரூ.15 லட்சமும் தரப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தமிழைப் பரப்ப திமுக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து..?
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகம், கனடாவின் டோரண்டோ பல்கலைக்கழகம், ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்மிக்க கல்வி நிறுவனங்களில் இருக்கை மற்றும் கல்விக்காக நிதி அளித்து தமிழ்நாடு அரசு உதவியுள்ளது. இணையக் கல்விக் கழகம் வழியாகவும் வெளிநாடுகளில் தமிழ் மொழி இலக்கியங்களைப் பரப்பி வருகிறது.
தமிழ் வளர்ச்சித் துறை முன்னெடுத்த ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்னவாயிற்று? அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக்கும் திட்டம் எந்த அளவில் உள்ளது?
இரண்டிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பதை முனைப்புடன் நிறைவேற்றுவதற்காக உள்ள உதவி இயக்குநர் துணை இயக்குநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது அரசுக் கடிதங்கள், சட்டமன்ற நடவடிக்கைகள் எல்லாம் தமிழில் தான் இருக்கின்றன.
தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச் சங்கம், அகரமுதலி போன்ற நிறுவனங்கள் கவனிக்கப்படாமல் சீரழிவதாக ஒரு கருத்து உள்ளது. இதுபோல், தமிழ் தொடர்பான நிறுவனங்கள் போதுமான நிதியும் பெற முடியாமல், கவனிக்கப்படாமல் இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி..?
கடந்த காலங்களில் நேர்ந்த குளறுபடிகளாலும் அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்த கோளாறுகளாலும் இந்தக் கருத்து எழுந்தது. அதுகுறித்து இப்போதைய அரசு மீது பழி கூற வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம் என்பதை மாநில அரசு விலக்கிக் கொண்டிருக்கிறதே..?
நல்ல முன்னேற்றம். ஒருமொழியின் அழிவுக்குக் காரணமானவற்றைக் கண்டுகொண்டவர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள்.
பிரதமர் மோடி, ‘தமிழ்தான் மூத்த மொழி’ எனச் சர்வதேச மேடைகளில் கூறி வருகிறார். இதை தமிழகத்தின் தமிழ் அமைப்புகள் இதுவரை வரவேற்றதாகத் தெரியவில்லையே?
சர்வதேச மேடைகளில் கூற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. உலகெங்கும் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் உலக நாடுகளில் தமிழின் மதிப்பை உயர்த்திக் காட்டி வைத்துள்ளனர். தமிழர் நாகரிகப் பழமையையும் கீழடி உள்ளிட்ட தொல்லியல் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. மோடிக்கு தமிழ் மீது உண்மையான மதிப்பு இருக்குமானால் கடந்த கால அரசு தமிழைச் செம்மொழி என்று அறிவித்ததைப் போல தமிழையும் ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கலாமே. இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்று உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த தமிழ் மொழி என்று சொல்லிக்கொள்ளலாமே!
தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை வர வாய்ப்புள்ளதா?
மத்திய அரசின் குடிமைப்பணி அதிகாரிகள் தாங்கள் பணிசெய்யும் மாநிலங்களின் ஆட்சி மொழியில், தன் தகுதி காண்பருவம் நிறைவடைவதற்குள் தேர்ச்சி பெற்றாக வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களுக்கு வேலை இல்லை என்று சொல்வதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் இடம் தருமா என்று யோசிக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களுக்கு வேலை இல்லை என்பதை விட வேலையில் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழைக் கற்க வேண்டும் என்பது இப்போது விதியாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்களும், வட மாநில எம்பி-க்களும் இந்தியிலேயே பெரும்பாலும் பேசுகின்றனர். ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில எம்பி-க்கள் தங்களின் தாய் மொழியில் பேசுவதில்லையே?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள். சில நேரம் அதிகாரத்துக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். இனி இணையத் தொழில் நுட்பம் மொழி எல்லைகளை உடைக்கும். அப்போது அவரவர் தாய்மொழியில் பேசினால் அடுத்தவர் தம் தாய்மொழியில் கேட்டுக்கொள்ளும் காலம் வந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட ஊடகங்களில் பேசும்போது, ஆங்கில வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்துவது தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதை ஏற்கிறீர்களா?
தமிழில் இணையான சொற்கள் இல்லாத போது – பயன்பாட்டிற்கு வராதபோது, அவர்களுக்குத் தெரியாத போது அப்படிப் பயன்படுத்துவதாக நினைக்கிறேன். ஆனால், தண்ணீர் என்பதற்குப் பதிலாக ‘வாட்டர்’ என்பதைப் போன்று ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தினால் அது தமிழின் வளர்ச்சிக்குப் பின்னடைவுதான்.
திமுக அங்கம் வகித்த யுபிஏ கூட்டணியின் இரண்டு ஆட்சிகளிலும் சர்ச்சையாகாத சம்ஸ்கிருத மொழிக்கான நிதி ஒதுக்கீடு இப்போது சர்ச்சையாவது ஏன்?
சம்ஸ்கிருத மொழிக்கான நிதி எதற்காக ஒதுக்கப்படுகிறது என்ற நோக்கத்தைப் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே மொழியின் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக அங்கம் வகித்த இரண்டு ஆட்சிகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது அப்படியான எண்ணம் அவர்களுக்கு ஏற்படவிடாமல் திமுக-வால் தடுக்க முடியும் என்று நம்பியிருக்கலாம். அந்த நம்பிக்கை பொய்யாகவில்லையே… உதாரணமாக, செம்மொழி எக்ஸ்பிரஸ் எனும் பெயரில் அப்போது வந்தவை எல்லாம் இப்போது வந்தே பாரத், தேஜஸ் என மாறிவிட்டனவே.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இந்தி பேசப்பட்டாலும் இந்தித் திணிப்பை அவர்கள் எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தி பேசாத போதும் இந்தி எதிர்க்கப்படுகிறது. இவ்விரண்டு நிலைப்பாட்டையும் ஒப்பிடுங்களேன்?
மகாராஷ்டிராவினர் வந்த பின் விழித்து எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் வரும்போதே வாசலிலேயே எதிர்க்கிறோம்.
முதல்வர் ஸ்டாலினை தலைவராகக் கொண்ட மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மையாகச் செயல்படுகிறதா?
ஒன்றிய அரசின் நிறுவனத்திற்கு மாநில முதல்வர் தலைமை. பாராட்டும் படியாகத்தான் செயற்படுகிறது. நிறைய நூல்கள் வெளியாகின்றன. 2011-ம் ஆண்டிற்குப் பின் வழங்கப்படாமல் இருந்த 10 ஆண்டுகளுக்கு உரிய கலைஞர் செம்மொழி விருதுகளையும் அதற்குப் பிறகும் தாமதமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறார்.
தமிழின் முக்கிய நூல்களை இந்தியில் மொழிபெயர்க்க கருணாநிதி முதல்வராக இருந்த போது ‘குறள் பீடம்’ எனும் அமைப்பை உருவாக்கினார். ஜெயலலிதா காலத்தில் மூடப்பட்ட அந்த அமைப்பு மீண்டும் துவக்கப்படுமா?
தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் வழியாக தற்போது மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2026 தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் தமிழ் மொழி, இந்தி எதிர்ப்பு இதுபற்றி எல்லாம் பேசும் என்கிறார்களே?
ஆம்! மொழி அரசியல் ஓயாது. மொழி வழி அதிகாரமும் அடக்குமுறையும் ஏற்றத்தாழ்வும் கட்டமைக்கப்பட்டுக் காப்பாற்றப்பட நினைக்கிற எண்ணம் இந்திய அரசியலில் இருக்கும் வரை தமிழ்நாட்டு அரசியலில் இந்தி எதிர்ப்பு இருக்கும்.
மொழி அரசியல் பேசி ஆட்சியைப் பிடிப்பது தமிழகத்தில் இனியும் சாத்தியம் என நினைக்கிறீர்களா?
மனிதர்களைப் போலவே மொழிக்கும் சுயமரியாதை உண்டு. சொல்லப் போனால் மனிதர்களின் சுயமரியாதையைக் காப்பாற்ற மொழி தேவைப்படுகிறது. தமிழர்களின் சுயமரியாதை தமிழ் மொழியோடு கட்டுண்டு இருக்கிறது. சேரன் செங்குட்டுவன் இமயம் நோக்கிப் படையெடுத்துச் சென்ற போதும் ‘காவா நாவின் கனகனும் விசயனும் அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்’ என்று கூறியதாகச் சிலப்பதிகாரம் சொல்கிறது. எனவே, மொழி அரசியல் இல்லாமல் தமிழக அரசியல் இருக்க வாய்ப்பில்லை.
மொழி அரசியலை திமுக பேசுமளவுக்கு அதிமுக பேசவில்லை… இருந்தாலும் அந்தக் கட்சியையும் மக்கள் ஆதரிக்கத்தானே செய்கிறார்கள்?
அதிமுக-வையும் இந்திக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசத் தமிழகம் அனுமதிப்பதில்லைதானே.
கருணாநிதிக்குப் பிறகு தமிழ் சார்ந்து சிந்திக்கும், பேசும் அரசியல் தலைவர்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமாகிவிட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பேசும் அரசியல் தலைவர்கள் குறைவாகத் தெரியலாம். ஆனால், செயற்பாடுகளில் தீவிரம் குறையவில்லைதானே.