சென்னை: இளங்கலை மருத்துவ மாணவர்களுக்காக முதல் தேசிய மாநாடு மே 2, 3-ம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) டீன் கே.சாந்தாராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளங்கலை மருத்துவ மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் தேசிய மாநாடு மே 2, 3-ம் தேதிகளில் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
முன்னதாக 1-ம் தேதி (இன்று) முன் மாநாட்டு செயல்முறை விளக்க பட்டறை நடைபெறுகிறது. நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு ஒரு முழுமையான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதே மாநாட்டின் நோக்கமாகும். மாநாட்டின் கருப்பொருளான ‘பன்முக அணுகுமுறை’ என்பது மாநாட்டின் தேவையை நிச்சயம் பூர்த்தி செய்யும்.
இளங்கலை மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பின்போது பயிலும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில், அறிவியல் உரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சட்ட மருத்துவ பிரச்சினைகள், எதிர்கால தொழில் வழிகாட்டுமுறைகள், தேர்வுகளை எதிர்கொள்வது போன்ற பிற கற்றல் அம்சங்களையும் மாநாடு உள்ளடக்கியுள்ளது.
இந்த மாநாட்டில் ஒரு புதிய கலாச்சார நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. இது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையின் முக்கியமான அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சியாகும். நமது வருங்கால மருத்துவர்கள் எளிதாக புரிந்துகொள்ளவும், சிறப்பாக கற்கவும் இது உதவும்.
இளங்கலை மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் போட்டிகளும் மாநாட்டின் ஒரு பகுதியாக இருக்கும். மருத்துவ போஸ்டர் விளக்கக்காட்சி, பிரதிபலிப்பு எழுத்து, புகைப்பட போட்டி, விளையாட்டு அடிப்படையிலான கற்றல் போன்றவை மாநாட்டில் இடம்பெறும்.
இம்மாநாட்டில் பங்கேற்க இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற பேச்சாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் திறமையையும், விரிவான மருத்துவ அனுபவத்தையும், நோயாளிகளின் அடிப்படையிலான கற்றலுடன் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். மாநாட்டில் 30 செயல் முறை விளக்க பட்டறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் இருந்து 111-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1,968 பதிவுகள் வந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.