மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களாக முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 19,850 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 10,850 கனஅடியாக இருந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல, கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 850 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவும், வெளியேற்றப்படும் நீரின் அளவும் சமமாக உள்ளது.
இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.