சென்னை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக மின்வாரியத்துக்கு சொந்தமான மேட்டூர், எண்ணூர், துாத்துக்குடி உள்ளிட்ட 5 அனல்மின் நிலையங்களில் வெளியாகும் உலர் சாம்பலில், 20 சதவீதம் சிறுமற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள உலர் சாம்பல் மற்ற நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
இந்த நடைமுறையை பின்பற்றாமல் சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியாகும் உலர் சாம்பல் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படாமல் நேரடியாக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மொத்தமாக சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. பின்னர் அந்த நிறுவனம் உலர் சாம்பலை வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கிறது.
உரிய நடவடிக்கை… இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஜன.31 அன்று டான்ஜெட்கோ இயக்குநருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க டான்ஜெட்கோ இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பதிலளிக்கடான்ஜெட்கோ இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, ஆவணங்களை தாக்கல் செய்ய கடந்த முறை உத்தரவிட்டும், இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே உலர் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான உரிய ஆவணங்களுடன் டான்ஜெட்கோ இயக்குநர் இன்று (ஆக.26) ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.