மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 45 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 18,290 கன அடியாகவும், மாலை 37, 263 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, இன்று காலை விநாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 112.73 அடியாக இருந்த நிலையில் மாலை 114 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 842.34 டிஎம்சியாக இருந்த நிலையில், 84.22 டிஎம்சியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 22,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
எனவே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதனால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான120 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. அணை நிரம்பினால், உபரிநீரை வெளியேற்றவும், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், அதனைக் கண்காணிக்கவும் நீர்வளத்துறை சார்பில் அணை இடது கரையில் வெள்ள நீர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், விரைவில் அணை முழுகொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. நீர்வரத்தை கண்காணிக்க அணையின் இடது கரையில் 16 கண் மதகு பகுதியில் வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 8 உதவி பொறியாளர்கள் உள்பட 45 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் வெள்ள நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
4 மணி நேரத்துக்கு ஒருமுறை நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நீர்வரத்து கண்காணிக்கப்படும். அதேநேரத்தில் முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் வெள்ள நிலவரம் கண்காணிக்கப்பட்டு, தேவைக்கேற்ப உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.