மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாசனத்துக்கு நீர் மின் நிலையங்கள் வழியாக 22,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக, மேட்டூர் அணைவரலாற்றில் முழு கொள்ளவான 120 அடியை கடந்த ஜூன் 29-ம் தேதி 44வது முறையாக எட்டியது. பின்னர், அணை நீர்மட்டம் சரிந்து மீண்டும் கடந்த ஜூலை 5-ம் தேதி நடப்பாண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர், அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,500 கன அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,100 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 7,900 கன அடி என மொத்தம் 30,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு இன்று காலை குறைந்ததையடுத்து, கடந்த 15 நாட்களுக்கு பிறகு, 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் இன்று காலை 9 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மின் நிலையங்கள் வழியாக டெல்டா பாசனத்துக்கு இன்று காலை 9 மணி முதல் 22,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தொடர்ந்து, கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, கடந்த 8நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 119 அடியாக சரிந்துள்ளது. தற்போது, உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நீரில் மூழ்கியிருந்த பாறைகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. மேலும், அணைக்கான நீர்வரத்து சரிந்தாலும், வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, அணை 16 கண் மதகு பகுதியில் வெள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.