மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 73,452 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 26,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் உரிய நாளான ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் தேவையின் காரணமாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 22,500 கன அடி வரை திறக்கப்பட்டு வந்தது.
கேரளா, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு நேற்று காலை 43,892 கன அடியாகவும், மாலை 60,740 கன அடியாகவும், இன்று காலை 73,452 கன அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 22,500 கன அடியிலிருந்து 26,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கன அடியும், மேல் மட்ட 8 கண் மதகு வழியாக 3,500 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 116.89 அடியாகவும், நீர் இருப்பு 88.59 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அணையின் மேல்மட்ட 8 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பதற்கு முன்பு மட்டம் பகுதியில் குளிக்க இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை அங்கிருந்து நீர்வளத்துறை ஊழியர்கள் வெளியேற்றினார். இதன் பின்னரே 8 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, விநாடிக்கு 3500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் மட்டம் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.
மேலும் நீர்வளத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விடுமுறை நாளான இன்று அணைக்கு சுற்றுலா வந்த பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.