மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 19,850 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 10,850 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்த நிலையில் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நேற்று காலை 10 மணி முதல் நிறுத்தப்பட்டது. கடந்த 6 நாட்களுக்கு பிறகு உபரிநீர் வெளியேற்றப்படுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, காவிரி டெல்டா பாசனத்துக்கு மட்டும் நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல், உபரிநீர் திட்டத்தில் ஏரிகளுக்கும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 24 ஆயிரம் கன அடியாகவும், மாலை 18 ஆயிரம் கனஅடியாகவும் பதிவான நீர்வரத்து நேற்று காலை 6 மணியளவில் 14 ஆயிரம் கனஅடியாகவும், பகல் 2 மணியளவில் 9,500 கனஅடியாகவும் சரிவடைந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல் காவிரியிலும் படிப்படியாக நீர்வரத்து குறைந்து வருகிறது.