மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 31,000 கனஅடியாகவும், இரவு 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று 18,000 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு நேற்று மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 119.90 அடியாகவும், நீர் இருப்பு 93.31 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் இரவு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மாலை 6 மணியளவில் நீர்வரத்து மீண்டும் 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.