சென்னை: திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என, திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி, பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்தில் தாக்கியதாக, திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என, புகார்தாரான காட்ஃப்ரே நோபிள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஆறு மாதங்களாக வழங்காத பாளையம்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இரு ஆய்வாளர்கள் நேரில் ஆஜராகியிருந்தனர். அப்போது, வழக்கின் விசாரணைக்கு கடந்த மார்ச் மாதம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட சம்மனை, மார்ச் வரை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பினார். புகார்தாரர் நோபிள், தனக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்ற சம்மனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்காத பாளையங்கோட்டை காவல்நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.
மேலும், வழக்குப்பதிவு செய்வதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில், சம்மன் அனுப்புவதில், சாட்சிகள் பதிவு செய்வதில் தாமதம் செய்யக் கூடாது என அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலி நீதிமன்றத்தில் செப்டம்பர் 9-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி. உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக திருநெல்வேலி நீதிமன்றம் வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப் பத்திரிகை நகல்களை வழங்கி, ஒரு மாதத்தில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து, ஆறு மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கை விரைந்து முடிக்க காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதேபோல, புகார்தாரர் நோபிளுக்கு வழக்கு முடியும் வரை பாதுகாப்பு வழங்கும்படி திருநெல்வேலி காவல் ஆணையருக்கு உத்தரவிடும்படி, தமிழக டி.ஜி.பி.க்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிபதி தனது உத்தரவில், பெரும்பாலான வழக்குகள் விசாரணை தாமதத்துக்கு காவல்துறையினர் தான் காரணம். மெத்தனப்போக்கால் காவல்துறையினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என கண்டனம் தெரிவித்துள்ளார்