புதுடெல்லி: கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, தொடரப்பட்ட தேர்தல் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நவம்பர் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வரும், அப்போதைய திமுக பொருளாளருமான ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி இந்த வெற்றியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது சைதை துரைசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ். நாயுடு, ‘‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அடுத்த விசாரணைக்கான தேதியை வழங்கினால் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும்’’ எனக்கூறி விசாரணையை தள்ளி வைக்கக் கோரினார்.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதீக் குமார், ‘‘வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது சவாலான காரியமாக உள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறையின் ஒருபக்க சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்’’ என்றார். அதையேற்க மறுத்த நீதிபதிகள், 2 மாதங்களில் ஒன்றும் நடந்து விடாது எனக் கூறி வழக்கு விசாரணையை நவம்பர் முதல்வாரத்துக்கு தள்ளிவைத்து உள்ளனர்.