சென்னை: லண்டனில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், இந்துஜா குழுமத்துடன் ரூ.7,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வரின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மூலமாக தமிழகத்துக்கு ரூ.15,516 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ‘டிஎன் ரைசிங்’ என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல் கட்டமாக ஜெர்மனிக்கு சென்ற முதல்வர் அங்கு முதலீட்டாளர்கள், தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்தார். இதை தொடர்ந்து, 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.7,020 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன்மூலம் 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது தலைமையில் ‘டிஎன் ரைசிங் ஐரோப்பா’ முதலீட்டாளர்கள் சந்திப்பு லண்டனில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு லண்டனில் இயங்கி வரும் இந்துஜா குழுமம், மின்சார வாகனங்களுக்கான செல், பேட்டரி உற்பத்தி,பிஇஎஸ்எஸ் (பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு) மற்றும்மின்சார சார்ஜிங் நிலையங்களுக்கான வணிகங்களில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்தி 1,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இது, முதல்வரின் இங்கிலாந்து பயணத்தின் முக்கியமான முன்னெடுப்பாகும்.
அதேபோல, அஸ்ட்ராஜெனகா (AstraZeneca) நிறுவனம் 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 3-வது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (GITC) ரூ.176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்கிறது. இங்கிலாந்தில் முன்னதாக உற்பத்தி, ஜவுளி தொழில்நுட்பம், வடிவமைப்பு கல்வி உள்ளிட்ட துறைகளில் 1,293 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.820 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம், முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தால் தமிழகம் பெற்றுள்ள மொத்த முதலீடு ரூ.15,516 கோடி. இதன் வாயிலாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளின்போது, தமிழக தொழில், வர்த்தகம், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், தொழில் துறை செயலர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: முதலீடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார வாகன சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இது 1,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இவை வெறும் எண்கள் அல்ல. இவை நமது வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இதுதான் திராவிட மாடலின் செயல்பாட்டு உணர்வு.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.