தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் மினி முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆக.4) தூத்துக்குடி வருகிறார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில், ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். முதல்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பணிமனைகள், 2 கிடங்குகள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயார் செய்யப்பட்டுள்ளன.
வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா நாளை (ஆக.4) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை காலை 10 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார்.
முதலீட்டாளர்கள் மாநாடு: அங்கிருந்து கார் மூலம் வின்ஃபாஸ்ட் ஆலைக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் ஆலையை திறந்து வைத்து, கார் விற்பனையை தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து, தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மதியம் 12.45 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார். தூத்துக்குடி வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்குமாறு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் பெ.கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளார்.