திருச்சி / சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
திருச்சியில் முப்படை ஓய்வூதியர்களுக்கான மாபெரும் குறைதீர் கூட்டத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவினர் தோல்வி பயத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மூலம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். முதல்வர் செயல்படாததன் விளைவாக லாக்கப் மரணம் நடந்துள்ளது.
காவல் நிலையத்துக்கு செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள். முதல்வரின் உத்தரவை எந்த அதிகாரியும் பின்பற்றுவதில்லை. அதிகாரிகள் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. அவர் சரியாக செயல்படவில்லை. திமுகவுடனான கூட்டணிக்காக தமிழக மக்களின் நலனை கூட்டணிக் கட்சிகள் அடகு வைத்து விட்டன.
துறை அமைச்சர் என்ற முறையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவை பார்வையிட்டேன். அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிவிட்டார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும், முதல்வர் வேட்பாளர் குறித்தும் அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள். இதில் நான் கருத்து கூற முடியாது.
கூட்டணியில் குழப்பம் இல்லை. எங்கள் கூட்டணிதான் 2026-ல் வெற்றி பெறும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காவல் துறையின் மொத்த செயல்பாடும் பூஜ்ஜியமாக இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய முதல்வர், கடந்த 4 ஆண்டுகளாக தூக்கத்தில் இருக்கிறார்.
திமுகவை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்களது ஒரே குறிக்கோள். ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் இணைய வேண்டும். துணை முதல்வர் பதவியை ஸ்டாலினிடம் கேட்டு வாங்கும் தைரியும் திருமாவளவனுக்கு உள்ளதா? இவ்வாறு அவர் கூறினார்.