சென்னை: முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற இருக்கின்றன.
இதில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான 25 வகையான போட்டிகள், மண்டல அளவிலான 7 வகை போட்டிகள், மாநில அளவிலான 37 வகை விளையாட்டுப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள், 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள், 15 வயது 35 வயது வரையிலான பொதுப் பிரிவினர், அரசுப் பணியாளர்கள் மற்றும் அனைத்து வயது மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கவுள்ளனர்.
தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெறுபவருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், அதேபோல் குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.75 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இந்த விளையாட்டுப்போட்டிகளுக்கான முன்பதிவு மற்றும் ஆகிய இணையதளங்களில் நடைபெற்று வருகிறது.
நாளை புறப்பாடு… இந்நிலையில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் இருசக்கர வாகனப் பேரணி சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து நேற்று தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் சர்வதேச மோட்டார் பந்தய வீராங்கனை நிவேதா ஜெசிக்கா தலைமையில் வீரர், வீராங்கனைகள் சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்து மீண்டும் நாளை (ஆக.17) காலை அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைய உள்ளனர்.
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தயாநிதி மாறன் எம்பி, விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.