சென்னை: மலர்க் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டி செல்கிறார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு 127-வது மலர்க் கண்காட்சி வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள் அனைவரும் ரசிக்கும் வகையில் 25-ம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 15-ம் தேதி ஊட்டி மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் கோவைக்கு பயணம் செய்கிறார். அங்கிருந்து சாலை வழியாக ஊட்டி செல்கிறார். தொடர்ந்து, கட்சி மற்றும் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் 15-ம் தேதி ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.
இதேபோல், பொதுமக்கள் பட்டா வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்குகிறார். இதைத் தவிர்த்து தொட்டபெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் 16 அல்லது 17-ம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.