சென்னை: மீலாது நபி, தொடர் விடுமுறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாளை சுப முகூர்த்த நாள், நாளை மறுநாள் மீலாது நபி, செப்.6, 7 வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்.4,5 தேதிகளில் 1,115 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து 130 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு சென்றவர்கள் சென்னை திரும்ப செப்.7-ம் தேதி 875 பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நாட்களில் மொத்தம் 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இவை தவிர்த்து, ஞாயிறன்று பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் பயணிக்க 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.