சென்னை: மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித் தரப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னானது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் உரிய வசிப்பிடம் இல்லாமல் புயல்வெள்ள பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை பாதுகாக்கும் விதமாக, கடற்கரையோரப் பகுதிகளில் 2 லட்சம் புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 116, முதல்வர் ஸ்டாலினுக்கு ஞாபகமிருக்கிறதா?
பல நூறு கோடி ரூபாய் செலவில் கடற்கரையோரத்தில் பேனா சிலை அமைக்க ஆர்வம் காட்டிய திராவிட மாடல், நான்கு ஆண்டுகளாகியும் மீனவர்களுக்கென ஒரு வீடுகூட கட்டித்தராதது ஏன், வாக்குறுதியை மறந்து, மீனவர்களை தத்தளிக்கவிட்டு, மீண்டுமொரு முறை ஆட்சியை மட்டும் பிடிக்க திட்டமிடுவது வெட்கக்கேடாக இல்லையா?
ஆட்சி அரியணையைக் கைப்பற்றும் ஆசையில் அளவில்லாமல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, ஆட்சி முடியும் வரை வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெற்று விளம்பரங்களை மட்டும் ஆரவாரமாக வெளியிடும் திமுக அரசுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீனவ பெருமக்கள் மொத்தமாக முடிவு கட்டுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.