சென்னை: தமிழக மின் வாரியம் மின்சாரத்தை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி தவிர தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்கள், வெளிச்சந்தைகளில் இருந்து கொள்முதல் செய்கிறது. உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும், கிரிட் எனப்படும் மின் கட்டமைப்பு மூலம் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
மின் கட்டமைப்பின் பணிகள் சவாலானது என்பதால் அதற்கான முழுத்திறனில் செயல்பட வேண்டும் என்பதற்காக நிதி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட 6 பணியிடங்களை உருவாக்கி மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மின் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: மின் பகிர்ந்தளிப்பு மையங்களின் பணியாளர்களின் முழுத்திறன் செயல்பாட்டுக்காக மத்திய மின்சாரத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி மின் தொடரமைப்பு கழகத்தின் முதன்மைப் பொறியாளர் மின் கட்டமைப்புக்கு நிதி கட்டுப்பாட்டாளர், துணை நிதி கட்டுப்பாட்டாளர், கணக்கு அலுவலர், கணக்கு மேற்பார்வையாளர் என தலா ஒரு பணியிடமும், 2 உதவியாளர்களும் என 6 பணியிடங்களை உருவாக்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், 6 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணியாளர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி போன்ற சலுகைகள் பொருந்தும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.