சென்னை: மின்வாரிய ஊழியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுகிறது. கடந்த, 2019 ஆண்டுக்கு முன் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2019-ம் ஆண்டு செப்டம்பர் முதல் அது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது,அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கு இந்த பண்டிகை கால முன்பணம் உயர்த்துவது தொடர்பாக வாரிய குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில், மின்வாரிய ஊழியர்களுக்கும் பண்டிகை கால முன்பணத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய பணியாளர்கள், மின்பகிர்மான கழகம், மின்னுற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் தொடரமைப்பு கழக பணியாளர்கள் மற்றும் பகுதி நேர தூய்மை பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.