சென்னை: கம்யூனிச இயக்கம் மாறாத தன்மையோடு நிலைத்து நின்று மக்களுக்காக போராடி வருகிறது என்று புத்தக வெளியீட்டு விழாவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில் கவிஞர் ஜீவ பாரதி எழுதிய ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூலை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார்.
அப்போது தங்கம் தென்னரசு பேசியது: காலங்கள் மாறிக்கொண்டிருக்க முடியும். ஆனால், கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவது இல்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது கணிதத்துக்கு பொருத்தமாக இருக்கலாம்.
ஆனால், பொதுவாழ்வில் நூற்றாண்டு கண்டிருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கம் மாறாது தன்மை யோடு நிலைத்து நின்று மக்களுக்காக போராடி வருகிறது. கம்யூனிசம் என்பது மாறிலி மட்டும் அல்ல, ஒரு முடிவிலியாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்நூல், இந்த மண்ணின் சிந்தனையைச் சிவப்பாக்கிய தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் முதல் மேடைத் தமிழுக்கு மேன்மை சேர்த்த தா.பாண்டியன் வரையிலான 100 கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து இயம்புகிறது.
இந்நூல் பொதுவுடமை இயக்கத்துக்கு மட்டுமின்றி, பொதுச் சமூகத்துக்கும் வழிகாட்டக் கூடிய மிகப்பெரிய ஆவணமாக இருக்கும். இந்த நூலை உருவாக்க வழிவகுத்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், நூலாசிரியர் கவிஞர் ஜீவபாரதிக்கும் எனது பாராட்டு’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவன தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், மேலாண்மை இயக்குநர் க.சந்தானம் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.