கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மார்த்தாண்டம் அருகேயுள்ள கீழப்பம்பம் பகுதியில் வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் தற்போது பெட்ரோல் வாடை வீசி வருகிறது. நேற்று முன்தினம் மாலை ஜெகன் என்பவரின் கிணற்றில் இருந்து கிடைத்த தண்ணீரில் டீசல், பெட்ரோல் கலந்திருந்தது. அந்த தண்ணீரை பற்ற வைத்தபோது தீப்பற்றி எரிந்தது. அந்த பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன.
பெட்ரோல், டீசல் சேமிப்பு கிடங்கில் இருந்து கசிவு ஏற்பட்டு கிணறுகளில் கலந்துள்ளதா? என நகராட்சி, சுகாதாரத் துறை, பெட்ரோலியத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை அதிகாரிகள், பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பெட்ரோல் பங்குகளில் இருந்து கசிவு ஏற்படவே பெரும்பாலும் வாய்ப்பு உள்ளதாகவும், இதுகுறித்து ஆய்வு முடிவில் தெரிவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவி்த்தனர்.