சென்னை: மாமேதை காரல் மார்க்ஸ்ஸின் 207-வது பிறந்த நாளான நேற்று, சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், அவரது சிலையை கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுக்கு, தலைமை தாங்கி கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசும்போது, “சென்னையில் காரல் மார்க்ஸ்ஸுக்கு சிலை வைக்கும் அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பின் மூலம் சென்னையில் காரல் மார்க்ஸ்ஸுக்கு சிலை இல்லை என்ற குறை தீர்க்கப்பட்டுள்ளது.
மார்க்ஸ்சிய தத்துவத்தை இளம்தலைமுறையும், தொழிலாளி வர்க்கமும் கற்பதன் மூலம் அது மேலும் செம்மைபெறும், சுரண்டலற்ற சமூகம் அமைக்க பாடுபடுவோம்” என்றார்.
இந்நிகழ்வில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ப.செல்வசிங், மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், கே.சாமுவேல்ராஜ், கே.சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, ஆர்.பத்ரி, எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.