சென்னை: மாநில கல்விக் கொள்கையின் படி முறையான கால அட்டவணை அமைத்து, பாடத்திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினார்.
பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை வகித்தார். துறை செயலர் சந்திரமோகன், இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் மற்றும் துறை சார்ந்த இயக்குநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை தொடர்பாக வெளியான அறிவிப்புகளின் நிலை, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், துறையின் எதிர்கால இலக்குகள் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, ‘தற்போது வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.
பாடத் திட்டங்களை மேம்படுத்த கால அட்டவணை தயாரித்து பணியாற்ற வேண்டும்’ என்பன உட்பட பல அறிவுறுத்தல்களை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார். பள்ளிக்கல்வித் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.