சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11-வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் அப்பாவு பேசியதாவது: அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய மூன்றும் இருந்தால்தான், மாநிலங்கள் சிறப்பாக இருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே இந்திய அரசியலமைப்பு சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் ஆரோக்கியமானதாக இருப்பதற்காக கடந்த காலங்களில் ராஜமன்னார், சர்க்காரியா, வெங்கடாசலய்யா, புஞ்சி தலைமையிலான குழுக்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளன.
மாநில ஆளுநரை நியமிக்க, முதல்வரின் ஆலோசனையை பெற வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. சமீபகாலமாக, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல், நிர்வாக ரீதியான அறிவிப்புகள், அரசாணைகள் மூலமாக கனிமவளம், மீன்வளம், கூட்டுறவு சங்கங்களுக்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன. இது கூட்டாட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு.
மேலும், மத்திய அரசு, மாநிலங்களின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல் பொருட்கள் மீது பல்வேறு வரிகளை விதிக்கிறது. எந்தவிதமான நிதிப் பகிர்வையும் மத்திய அரசு ஒழுங்காக மேற்கொள்வது இல்லை. ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக் ஷா) திட்டத்தின்கீழ் மாநில அரசுக்கு தரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மத்திய அரசின்பங்களிப்பான 60 சதவீத நிதியை கடந்த 4 ஆண்டுகளாக ஒதுக்கவில்லை.
100 நாள் வேலை திட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழக அரசு 11.19 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 2019-24 காலகட்டத்தில் 17-வது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளித்து சட்டமாக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில்ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றன.
இதனால், மக்கள் நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மாநில அரசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் 16 மாநிலங்கள் உள்ளன. மாநில அரசுகளுடன் அதிகாரத்தை ஜெர்மனி அரசு சமமாக பகிர்ந்து கொள்கிறது. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கூறிய கருத்தின் அடிப்படையில், மாநிலங்களுக்கு முழுமையாக நிதி சுயாட்சி வழங்க வேண்டும்அல்லது மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.