சென்னை: மாணவர்களிடம் சாதிய உணர்வு , பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் முப்பெரும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில்புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதல்வர் தொடங்கிவைத்தார். தொடர்ந்து ரூ.122 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 76 அரசு பள்ளிக்கட்டிடங்களை திறந்துவைத்த அவர், ரூ.310 கோடியில் 262 அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், பாரத சாரண-சாரணியர் தலைமை அலுவலக கட்டிடத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது: ஆசிரியர் என்பவர் பாடப்புத்தகத்தில் இருந்து மட்டுமல்லாமல் தன்னுடைய கல்வியையும், அனுபவத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, எதிர்காலத்தில் நல்லொழுக்கம்மிக்க சமுதாயத்தை உருவாக்குகிறவர்கள். இன்றைய தினம் அறிவியல், வரலாறு, கணிதம் என எந்தப் பாடமாக இருந்தாலும், அதன் ஆழத்தை, மிகவும் எளிதாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகிவிட்டன. இத்தகவல்களை மாணவர்களின் அறிவாற்றலுக்குக் கொண்டு சென்று அவர்களுடைய சிந்தனையைத் தூண்டி, அறிவை மேம்படுத்த வேண்டிய பெரும் பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
ஏனென்றால், எந்த அளவுக்கு அறிவார்ந்த தகவல்கள் கொட்டிக்கிடக்கிறதோ, அதற்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல் தேவையற்ற குப்பையும் இருக்கின்றன. நாம்தான் குழந்தைகளுக்கு சரியானதை அடையாளம் காட்டவேண்டும். எதற்கெடுத்தாலும் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருக்கின்ற தலைமுறையாக மாணவர்கள் மாறிவிடக் கூடாது.
தொழில்நுட்பத்துக்கும், மனிதச் சிந்தனைக்குமான வேறுபாட்டை உணர்த்த வேண்டும். அறத்தின் வலிமையையும், நேர்மையின் தேவையையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பாடப் புத்தகங்களைக் கடந்து, இலக்கியங்களை, பொது அறிவுத்தகவல்களை, சமூக ஒழுக்கத்தை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, காலநிலை மாற்றம் குறித்த தெளிவை, மாற்று எரிசக்திகளின் தேவையைப் பற்றியெல்லாம் புரிய வைக்க வேண்டும். மாணவர்களிடம் நீங்கள் ஒரு நண்பனாக பழக வேண்டும்.
குழந்தைகள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள். சிலர் கலகலவென்று பேசுவார்கள். சிலர் படித்த குடும்பங்களில் இருந்து வந்திருப்பார்கள். சிலருடைய குடும்பங்கள் இப்போதுதான் கல்வி கற்க தொடங்கியிருப்பார்கள். அனைவருடைய வீட்டிலும் ஒரே சூழல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால், அனைவரையும் ஒரே அளவுகோலோடு, முன்முடிவோடு அணுகக்கூடாது. அவர்களின் குடும்பச்சூழல் என்ன, அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சினை என்னவென்று கவனித்து, அவர்களை வளர்த்தெடுக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு. ஏனென்றால், நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்.
கல்வி தொடர்பாக செய்யும் பணிகளைத் தாண்டி, மாணவர்களுக்குள்ளே சாதிய உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் தலையெடுக்காமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு சமத்துவம், சமூகநீதியின் தேவையைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். மாணவர்களிடம் அடிக்கடி மனதுவிட்டு பேசுங்கள். நூலகங்களையும், வாசிப்புப் பழக்கத்தையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்கு, ஆசிரியர்கள் முதலில் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வரவேற்றுப் பேசும்போது, “அரசு பள்ளிகளில் 8,380 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் என 3,227 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்” என்றார்.
இவ்விழாவில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சி.வி.கணேசன், நாசர், ஆசிரியர்
தேர்வு வாரிய தலைவர் எஸ்.ஜெயந்தி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, பள்ளிக்கல்வித் துறையின் செயலர் பி.சந்திரமோகன் நன்றி கூறினார்.