சென்னை: சென்னையில் மழைநீரை சேமிக்கும் வகையில் ரூ.159.08 கோடியில் 70 குளங்கள் புனரமைக்கப்பட்டு, 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் பருவமழையை முன்னிட்டு ஆறுகள், குளங்கள், கால்வாய்களை தூர்வாரி அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மழைநீர் வடிகால்வாய்களை அமைத்தல், மழைநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே போல் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுத்து அதைச் சேமிக்கும் வகையில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் விளையாட்டு மைதானங்கள், பூங்காங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 70 குளங்கள் ரூ.144.34 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. பூங்காக்களில் தேங்கும் மழைநீரை முழுமையாக சேமிக்கும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.14.74 கோடியில் 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் தென்சென்னை பகுதியில் 22 குளங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் புதிதாக 41 குளங்களில் ரூ.119.42 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில்கடந்த ஆண்டில் 4 புதிய குளங்கள் அமைக்கப்பட்டு, அதன் கொள்ளளவை இரட்டிப்பாக்க பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே எம்.ஆர்.டி.எஸ். பகுதியில் சிக்ஸ்வென்ட் கல்வெர்ட் அருகில் கடந்த ஆண்டில் 2 குளங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பருவமழைக் காலங்களில் அதிக அளவில் மழைநீரை சேமித்து சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேக்கத்தை தவிர்க்க முடியும். மழைநீரை நிலத்தடியில் சேமிக்கவும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.