சென்னை: மலேசியாவில் இருந்து கேரளா சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் தரையிறக்கப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் 158 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 166 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது.
நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை வான்வெளியில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, தகவலைத் தெரிவித்து விமானத்தை சென்னையில் தரையிறக்க அனுமதி கேட்டார். கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதையடுத்து, நள்ளிரவு 12.10 மணிக்கு சென்னையில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பொறியாளர்கள் குழுவினர் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். நேற்று மாலையில் விமானம் சென்னையிலிருந்து கோழிக்கோட்டுக்கு புறப்பட்டு சென்றது.