மதுரை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் சர்வதேச சூட்டிங் பால் போட்டியில் தங்கம், வெண்கல பதக்கம் பெற்ற வீராங்கணைக்கு 900 மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சிவகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
என் மகள் ஹரினி சூட்டிங் பால் விளையாட்டு வீராங்கணை. கடந்த பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நடைபெற்ற ஆசிய சூட்டிங் பால் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற முதல் உலக கோப்பை சூட்டிங் பால் சேம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். ஹரினி கடந்த மே மாதம் பிளஸ்-2 முடித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றார். விளையாட்டு பிரிவில் எம்பிபிஎஸ் சீட்டுக்கு விண்ணப்பித்தார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றால் 500 மதிப்பெண், வெள்ளி பதக்கம் வென்றால் 450 மதிப்பெண், வெண்கல பதக்கம் பெற்றால் 400 மதிப்பெண், போட்டியில் பங்கேற்றால் 250 மதிப்பெண் வழங்கப்படும். இந்த அடிப்படையில் 2 சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்கள் அடிப்படையில் 900 மதிப்பெண்ணை என் மகளுக்கு வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 18- ந் தேதி நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின் போது சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெற்றதற்கு மதிப்பெண் வழங்க, அந்தப் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 நாடுகள் பங்கேற்று இருக்க வேண்டும், அவ்வாறு பங்கேற்காததால் தேசிய போட்டிகளில் பெற்ற பதக்கங்களுக்கு மதிப்பெண் வழங்க முடியாது என்றும், தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் பெற்றதற்காக 200 மதிப்பெண் மட்டும் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
சூட்டிங் பால் போட்டி என்பது ஏழு பேர் அடங்கிய குழுவினர் விளையாடும் விளையாட்டு ஆகும். இப்போட்டிக்கு 7 நாடுகள் விதி பொருந்தாது. எனவே சர்வதேச போட்டியில் தங்கம், வெண்கல பெற்ற பதக்கங்களுக்கு 900 மதிப்பெண் வழங்கி, விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட் வழங்கவும், என் மகளுக்காக ஒரு எம்பிபிஎஸ் இடத்தை காலியாக வைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, மனுதாரர் மகள் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் மத்திய அரசு பணிக்கு தகுதியானவர் என மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. அப்படியிருக்கும் போது 7 நாடுகள் பங்கேற்க சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் தான் மதிப்பெண் வழங்குவோம் என்பது சரியல்ல என்றார். அரசு தரப்பில் மருத்துவ மாணவர் கலந்தாய்வு முடிந்துள்ளது.
யாருக்கும் இதுவரை கல்லூரி ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மனுதாரர் மகளுக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றதற்காக 900 மதிப்பெண் வழங்கி அதன் அடிப்படையில் மருத்துவ சீட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.