சென்னை: ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்சைகள் குறித்து அனைத்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலர் மருத்துவர் ராகவ் லங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் நாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் நோய் தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு நிச்சயம் என்றாலும், உரிய சிகிச்சைகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் 100 சதவீதம் தடுக்க முடியும். 2030-ம் ஆண்டுக்குள் ரேபிஸ் தொற்றை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகமும், கால்நடை அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தியுள்ளன. இதை சாத்தியமாக்குவதில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் பங்களிப்பு முக்கியமானது.
அதன்படி, விலங்கு கடிக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையான பயிற்சிகளை வழங்க வேண்டும். தேசிய வழிகாட்டுதல்களின்படி நோய் தடுப்பு மற்றும் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்க வேண்டும்.
போதிய எண்ணிக்கையில் ரேபிஸ் தடுப்பூசிகள், ரேபிஸ் எதிர்ப்பாற்றல் தடுப்பூசிகள் இருப்பதை அவசியம் உறுதி செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு விலங்கு கடி பாதிப்புகளுக்காக சிகிச்சைக்கு வருவோரின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டை பராமரிக்க வேண்டும். அந்த தரவுகளை ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தில் (ஐஹெச்ஐபி) கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அதை சார்ந்த மருத்துவமனைகளில் செயல்படும் புற நோயாளிகள் பிரிவு, பிற முக்கிய இடங்களில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.