சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணொலி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே முகாம்களின் பயனாளிகளுடன் கலந்துரைய முதல்வர், அரசு கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் ஓய்வில் இருந்தாலும் அலுவல் பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார்.
அந்த வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, இதுவரை நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். ஆய்வின்போது, ஆட்சியர்களிடம் பேசிய முதல்வர், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் காணொலி வாயிலாக முதல்வர் கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளின் விவரங்களை கேட்டறிந்தார். அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, தலைமைச் செயலர் நா.முருகானந்தத்துடன் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். நிகழ்வில், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில், “மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு, அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். ஓய்வுக்குப் பிறகு, விரைவில் மக்களைச் சந்திப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “முதல்வர் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்” என்றார்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் நலமுடன் இருக்கிறார். அவரது சகோதரர் மு.க.முத்து மரணமடைந்ததால், அன்றைய தினம் காலையில் இருந்து முதல்வர் உணவருந்தவில்லை. இதைத் தொடர்ந்தே அவருக்கு லேசான தலை சுற்றல் வந்தது. இதற்கான பரிசோதனை நடைபெறுகிறது” என்றார்.