சென்னை: தரமணி மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை அக். 31-க்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சர்தார் பட்டேல்சாலையையும் – ராஜீவ்காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், தரமணி மத்திய கைலாஷ் சந்திப்பில் எல் (L) வடிவத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தி அக்டோபர் 31-க்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும்,சர்தார் பட்டேல் சாலையில், காந்தி மண்டபம் சாலை முதல் ஜிஎஸ்டி சாலை வரை, சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இருப்பதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தற்போதைய 4 வழித்தட சாலையை, 6 வழித்தடமாக விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு) சத்தியபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் ஆர்.சந்திரசேகர், சென்னை பெருநகர கண்காணிப்புப் பொறியாளர்ஜவஹர் முத்துராஜ், கண்காணிப்பு பொறியாளர் வி.சரவணசெல்வம், கோட்டப் பொறியாளர் பி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.