மத்திய கைலாஷ் பகுதிகளில் வீட்டுக்கு ஒரு கார் இல்லாமல், வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கார் இருப்பது தான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொளத்தூர் ரெட்டேரி சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் அழகுபடுத்தவும் மற்றும் சேவை சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில், 7 மீட்டர் அகலமும், 600 மீட்டர் நீளமும் கொண்ட நடைப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சிஎம்டிஏ சார்பில் கொளத்தூர் ஏரியை ரூ.5 கோடியில் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
ரூ.139 கோடி செலவில் பாடி ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. 70 சதவீதம் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் தினத்தில் சைதாப்பேட்டை மேம்பாலத்தை முதல்வர் திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய கைலாஷ் பகுதிகளில் நானே பலமுறை பயணித் திருக்கிறேன். அந்த பகுதிகளில் வீட்டுக்கு ஒரு கார் என்று இல்லாமல், வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கார் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலைகளை விரிவுபடுத்தி சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி, மேம்பால பணிகள் முடிந்த பிறகு, அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பி்ன்னர், அவரிடம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுகவை உருட்டுக்கள் பலவிதம் என விமர்சனம் செய்தது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் ஆட்சியில் நடைபெறுவதை மீண்டும் நினைவுபடுத்துகிறார். யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் மக்கள் கோரிக்கை நிறைவேற்றுதை தான் பார்க்க வேண்டும். அந்த ஆட்சியை விட இந்த ஆட்சி மக்களுடைய திட்டங்களை நிறைவேற்றுவதில் மும்முரமாக உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அற்புதமான திட்டம் என தமிழகம் வரவேற்கிறது.
வெளியே வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டதால் சுற்றுப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் மக்கள் எடை போட்டு பார்ப்பார்கள். எங்கள் அணி 200-க்கு 200 வெற்றி பெறும். நாங்கள் அவரை மதிக்கிறோம். தனது அடையாளத்தை காட்டி கொள்வதற்காக அங்கொன்றும் இங்கொன்றும் வந்தது எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். அவர் பேசுவதில் உண்மை இல்லை” என்றார்.
அதேபோல், பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளது குறித்த கேள்விக்கு, “மக்களவை தேர்தலுக்கு பிரதமர் வந்தார். வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு வருவார். இந்த மண் திராவிட மண். பெரியார், அண்ணா, கருணாநிதி என மும்மூர்த்திகளால் பண்பட்டு இருக்கின்ற இந்த மண் எந்த காலத்திலும், பிரதமர் வந்தாலும், அவரின் சகாக்கள் வந்தாலும் இந்த மண்ணிலே காவிகள் எந்த காலத்திலும் காலூன முடியாது” என்றார்.