சென்னை: பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைத்த சாலைகள் எத்தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராம ஊராட்சி, இரண்டு பக்கமும் பவானி ஆற்றால் சூழப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காலங்களில், பரிசல் போக்குவரத்து தடைபடுவதால், சுமார் 8 கி.மீ தொலைவுக்குச் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது.
குறிப்பாக, அவசர மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாமல், பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பவானி ஆற்றைக் கடந்து செல்ல, உயர்மட்டப் பாலம் அமைத்துத் தரக் கோரி, பல ஆண்டுகளாக அம்மாபாளையம் கிராமப் பொதுமக்கள், முதல்வரிடமும், அந்தியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்தின் இன்னும் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் 100 சதவீத சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறி வருகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டுவந்த பிரதமரின் கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்துக்காக மத்திய அரசு தமிழகத்துக்கு, கடந்த ஆண்டு வரை வழங்கிய நிதி ரூ.5,886 கோடி. அந்தத் திட்டத்தை, ‘முதல்வரின் கிராம சாலைகள் திட்டம்’ என்று பெயர் மாற்றி அரசாணை வெளியிட்ட திமுக அரசு, இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை? மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கும் திமுக அரசு, அந்தத் திட்டங்களை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
2025-ம் ஆண்டிலும், தமிழக கிராம மாணவ, மாணவியர், கல்வி கற்பதற்காக, பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது, வெறும் விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.