சென்னை: தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்போம் என மத்திய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் காரசாரமாக வாதிடப்பட்டது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல், குறைவான தொகையை மட்டுமே தமிழக அரசு தங்களுக்கு வழங்குவதாகக்கூறி தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2024- 25ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தையும் 2025- 26ம் கல்வி ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்ட, உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தையும் தனியார் பள்ளிகளுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தங்களுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை முறையாக வழங்கவில்லை எனக் கூறி தனியார் பள்ளிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி உரிய தொகை வழங்கப்படவில்லை என்றார். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் கொடுக்க வேண்டும். ஆனால் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மத்திய அரசின் பங்களிப்பு தொகையை வழங்குவோம் என மத்திய அரசு பிடிவாதம் செய்து வருவதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நிதி கிடைக்குமே என்றார். அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி கொடுப்போம் என மத்திய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. தமிழக அரசும் ஒருபோதும் அடிபணியாது. இதுதொடர்பாக உரிய பதில்மனு தாக்கல் செய்யப்படும்” என காரசாரமாக தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் அக்.24-க்கு தள்ளி வைத்தார்.