மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உதவி ஆணையர் உட்பட 5 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் இருந்தபோது வரி வசூல் தொடர்பாக திடீர் ஆய்வு நடத்தினார். அதில் 2022, 2023-ம் ஆண்டுகளில் வரி வசூல் முறைகேட்டால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து மத்திய குற்றப் பிரிவினர் மற்றும் சைபர் கிரைம் போலீஸார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நூர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வரி வசூல் முறைகேடு தொடர்பாக கைதான இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நூர், ஒப்பந்த ஊழியர் சதீஷ், ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை மாவட்ட முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி ஆஜராகி, வழக்கு ஆவணங்களை பரிசீலிக்க கால அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து விசாரணையை ஜூலை 15-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.