மதுரை மாநகராட்சியில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த வார்டுகளில் தினமும் காலையில் 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த காலத்தில் வாரத்துக்கு சில நாட்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் பெற்ற மக்கள், தற்போது தினமும் குடிநீர் கிடைப்பதால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாநராட்சியில் வசிக்கும் 20 லட்சம் மக்களுக்காக, கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.1,609.69 கோடியில் அம்ரூத் மற்றும் ஆசிய வங்கி நிதியுதவி மூலம் தொடங்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. 100 வார்டுகளில் 65 வார்டுகளில் முழுமையாக இந்த திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. மற்ற வார்டுகளில் பணிகள் சுறுசுறுப்பாக நடக்கின்றன. முதற்கட்டமாக இணைக்கப்பட்ட புறநகர் வார்டுகள் உள்பட மொத்தம் 36 வார்டுகளில் தினமும் காலையில் 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை, வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது 2 முறையோ மட்டுமே குடிநீர் பெற்று வந்த இந்த வார்டு மக்கள், தற்போது தினசரி 2 மணி நேரம் குடிநீர் விநியோகத்தால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள ஒட்டுமொத்த பழைய குடிநீர் குழாய்களும் மாற்றப்பட்டு இந்த திட்டத்தில் 2,200 கி.மீ.க்கு புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 100 கி.மீ. தொலைவுக்கு மட்டும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த குழாய்கள் பதிப்பு முழுமையாக நிறைவுபெற்ற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி பரிசோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்த 36 வார்டுகளில் மட்டும் தற்போது காலையில் மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் 10 வார்டுகள் விரைவில் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். வைகை-1, வைகை-2 குடிநீர் விநியோகம் செய்யப்படும் வார்டுகளுக்கும், பழைய குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் வழியாக முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் செல்கிறது’’ என்றனர்.
சொத்து வரி முறைகேடு, உள்ளூர் மாநகராட்சி அரசியல், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாநகராட்சி ஆணையர் சித்ரா, முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை தினமும் கண்காணித்து இப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களுக்கு தினமும் 2 வேளை குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக முல்லை பெரியாறு குடிநீர் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிநீரின் சுவையும், தரமும் அருமை: வைகை-1, வைகை-2 குடிநீர் விநியோகத்தில் வழங்கப்பட்ட குடிநீரில் அதிகளவு உப்புத் தன்மை இருந்ததாக வும், தற்போது வழங்கப்படும் முல்லை பெரியாறு குடிநீரின் சுவையும், தரமும் அருமையாக இருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த திட்டத்தில் மொத்தம் 38 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர பழைய மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் 44 உள்ளன. இதில், புதிய மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளில் 2 தவிர மற்றவை அனைத்திலும் முல்லை பெரியாறு குடிநீரை ஏற்றி, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
100 வார்டுகளுக்கும் நிறைவு பெற்ற பிறகு வரும் செப்டம்பர் இறுதி முதல் தினமும் காலையும், மாலையும் 2 வேளை குடிநீர் விநியோகம் செய்யும் திட்டமும், அது வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்பட்சத்தில் பகல் பொழுதில் தினமும் தொடர்ச்சியாக 8 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டமும் உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.