‘10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின் தூய்மை தரத்தில் மதுரைக்கு கடைசி இடம்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பை வைத்து மதுரையில் மார்க்சிஸ்ட்களும் திமுக-வினரும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நகர்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மக்களைத் திரட்டி பேரணி நடத்தினார் மதுரையின் மார்க்சிஸ்ட் எம்பி-யான சு.வெங்கடேசன். இதை ரசிக்காத திமுக-வினர், லோக்கல் அமைச்சரின் ஆலோசனைப்படி ஆங்காங்கே ஃபிளெக்ஸ்களை வைத்து சு.வெங்கடேசனை சுளீரெனக் கண்டித்தனர். பதிலுக்கு மார்க்சிஸ்ட்களும் திமுக-வினருக்கு எதிராக பொளேரென போஸ்டர்களை ஓட்டினர். தொடர்ந்து, திமுக மேடைகளில் சு.வெங்கடேசனை வம்புக்கிழுத்து வசைபாடினர்.
அண்மையில், மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டபோது செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கடேசன், “இந்த விஷயத்தில் நாங்கள் தான் முதலில் குரல் கொடுத்தோம். அதன் அடிப்படையிலேயே முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்” என்றார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தூய்மை மாநகரங்கள் பட்டியலில் மதுரைக்கு கடைசி இடம் கிடைத்திருப்பது குறித்து அறிக்கை வெளியிட்ட வெங்கடேசன், ‘மதுரை நகரத்தின் தூய்மை மிக மோசமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குறுகிய கால அரசியல் லாப நோக்கத்திற்காக மக்கள் நலன் தொடர்ந்து சமரசம் செய்யப்படுகிறது. மதுரையை தூய்மையாக நிர்வகிப்பது கடினமல்ல. அதற்கான நிர்வாகத்திறனும், நோக்கத்தின் நேர்மையும் மிக முக்கியமானது’ என தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைதான் இப்போது மீண்டும் பஞ்சாயத்தாகி இருக்கிறது. இது தொடர்பாக கடந்த 29-ம் தேதி நடந்த மாமன்றக் கூட்டத்தில் பேசிய திமுக மாமன்றக் குழு தலைவர் மா.ஜெயராம், “திமுக தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி தெருத்தெருவாக உழைத்ததால் தான் சு.வெங்கடேசன் எம்பி-யாக டெல்லி சென்று வந்து கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் பாஜக எதிர்ப்பைத் தவிர, மதுரை மக்கள் பிரச்சினைகளை பற்றி அவர் என்ன பேசினார்?” என்றார்.
மேயர் இந்திராணியும், “இந்த விஷயத்தில் சு.வெங்கடேசன் மீது எங்களுக்கும் வருத்தம்தான்” என்றார். இதற்கு மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் போட்டதால், அவர்களின் இருக்கைக்கே சென்று, “திமுக இல்லாமல் உங்களால் ஜெயிக்க முடியுமா?” என்று திமுக-வினர் கேட்க, பதிலுக்கு மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள், “2 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் நாங்களும் உங்களுக்காக உழைத்திருக்கிறோம்” என்று சொன்னார்கள்.

இது குறித்து கேட்க சு.வெங்கடேசனை நாம் தொடர்பு கொண்ட போது “முக்கிய வேலையாக இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.
மார்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கணேசனிடம் இது விஷயமாக பேசியபோது “மதுரை மாநகராட்சியின் தூய்மை நிலவரம் குறித்து மத்திய அரசு கொடுத்த புள்ளி விவரத்தின் அடிப்படையில்தான் சு.வெங்கடேசன் பேசினாரே தவிர, அவராக எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை.
மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் சுட்டிக்காட்டியதை திமுக-வினர் தவறாக புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. கூட்டணியில் இருந்தாலும் சுட்டிக்காட்ட வேண்டியது எங்களது கடமை தானே. கூட்டணியில் உள்ள அனைவரது உழைப்பும் பங்களிப்பும் சேர்ந்தால் தானே 100 சதவீதம் வெற்றி” என்றார்.
திமுக பகுதிச் செயலாளர் புண்ணியமூர்த்தி நம்மிடம், “சு.வெங்கடேசனின் செயல்பாடுகளும், கருத்துகளும் சில நேரத்தில் திமுக-வுக்கு எதிராகவே அமைந்துவிடுகிறது. மதுரை மாநகராட்சி தூய்மை விவகாரத்தில் கூட்டத்துக்கு வந்து கருத்துச் சொல்லாமல் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவிக்கிறார். இதை எப்படி ஏற்கமுடியும்? கூட்டணியில் இருந்துகொண்டே மக்கள் கோரிக்கை என்ற பெயரில் ஆளுக்கட்சிக்கு எதிராகவே பேசுவது கூட்டணியை பாதிக்கும்” என்றார்.
இன்னும் சில மதுரை திமுக முன்னோடிகளோ, “முதல்வருடன் நெருக்கமாக இருக்கும் வெங்கடேசன் மதுரை திமுக-வினருடன் அத்தனை இணக்கமாக இல்லை. கோட்டையில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலருடன் நட்பில் இருக்கிறார் வெங்கடேசன். அந்த நட்பை பயன்படுத்தி மதுரை சம்பந்தப்பட்ட விஷயங்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதால் இங்குள்ள திமுக-வினருக்கு தேவையற்ற குடைச்சல் வருகிறது. அதனால் அவர்கள் கடுப்பாகிறார்கள். மதுரை திமுக-வினரும் சு.வெங்கடேசனும் தொடர்ச்சியாக மல்யுத்தம் நடத்தி வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்” என்கிறார்கள்.