மதுரை: மதுரை தவெக மாநாட்டின்போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்சம் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏஆர்.ஜெயருத்ரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் கப்பலூர் முதல் உத்தங்குடி வரையிலான 31.2 கிலோமீட்டர் தொலைவு சாலை வழியாக, தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்கின்றன.
இந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை சுங்கக் கட்டணம் வசூலாகிறது. எனினும், சாலை பராமரிப்பு மோசமாகவே உள்ளது. மேலும், இந்த சாலையில் அரசியல் கட்சிகளின் மாநாடு, பேரணி, மத அமைப்புகளின் மாநாடு, பொதுக் கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதில் பங்கேற்க வருவோர் வாகனங்களை சாலைகளில் நிறுத்திவிட்டு செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சுங்கக் கட்டணம் செலுத்தும் வாகனங்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
அண்மையில் தவெக 2-வது மாநில மாநாட்டுக்கு இந்த சாலையில் அனுமதி வழங்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடியிலிருந்து வந்த 1.30 லட்சம் வாகனங்கள் கப்பலூர், எலியார்பத்தி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளன. இதனால், மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, சுங்கக் கட்டணம் செலுத்தி பயணம் செய்வோருக்கு பாகுபாடு பார்ப்பதாகும்.
எனவே, கப்பலூர் முதல் உத்தங்குடி வரையிலான சாலையில் அரசியல் கட்சிகள், மத அமைப்புகளின் மாநாடு, பேரணி, பொதுக்கூட்டங்கள் மற்றும் திருமண மண்டபம், வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்க தடை விதித்தும், ஏற்கெனவே வழங்கிய அனுமதியை திரும்பப் பெறவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “மனுதாரர் குறிப்பிட்டுள்ள சாலையில் கடந்த ஓராண்டில் எத்தனை வாகனங்கள் சென்றுள்ளன, எவ்வளவு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.