மதுரை: மதுரையில் முதல்வர் வரும் பாதையில் அமைந்திருந்த ‘பந்தல் குடி’ கழிவுநீர் கால்வாயை சுற்றி லும் வண்ண திரைச்சீலைகளை கட்டி மறைத்திருந்தனர்.
மதுரை மாநகராட்சியில் உள்ள மழைநீர் கால்வாய்களில் ‘பந்தல்குடி’ கால்வாய் முக்கியமானது. கடந்த காலத்தில் செல்லூர் கண்மாயின் உபரிநீர் இந்த கால்வாய் வழியாக வைகை ஆற்றில் சென்று கலந்தது. தற்போது செல்லூர் பகுதியின் ஒட்டுமொத்த கழிவுநீரும் இக்கால்வாய் வழியாகச் சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. இப்பகுதியை கடந்து செல்லும் மக்கள், கடும் துர்நாற்றத்தின் மத்தியில் சென்று வந்தனர். இக்கால்வாய் வழியாகத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார்.
பந்தல்குடி கால்வாய் சீரமைக்கப்படாமலேயே இருக்கிறது. முதல்வர் வரும்போது இந்த கால்வாய் அவர் கண்ணில் படாத வகையில் தங்கள் ஆலோசனைப்படியே அதிகாரிகள் கால்வாயை மறைக்கும் பணியில் ஈடுபட்டனர். கால்வாயின் இருபுறமும் வண்ண திரைச்சீலைகளை அழகாக கட்டி மறைத்திருந்ததாக திமுகவினர் தெரிவித்தனர். கால்வாயைச் சுற்றிலும் திரைச்சீலைகள் அமைத்திருந்ததை பார்க்க அழகாக இருந்ததால், இதேபோல் எப்போதும் இப்பகுதி இருக்காதா என்ற ஏக்கத்துடன் அப்பகுதியை பொதுமக்கள் கடந்து சென்றனர்.
எனினும், இதுதொடர்பாக மாறுபட்ட விமர்சனம் எழுந்தததால் திரைச்சீலைகள் பல இடங்களில் அகற்றப்பட்டன. இரவில் ரோடு ஷோ முடிந்து சுற்றுலா மாளிகை செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலின் இந்தக் கால்வாயை ஆய்வு செய்தார்.