சென்னை: சென்னையில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் பங்கேற்க கடந்த மே 2 அன்று சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனத்தின்கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதியது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநாட்டில் மதுரை ஆதீனம், பேசியது இரு மதத்தினருக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் உள்ளதாகக்கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின்பேரில், சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். போலீஸார் தரப்பில் பெருநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்தார்.
பதிலுக்கு ஆதீனம் தரப்பில் இந்த வழக்கு அரசியல் உள் நோக்கத்துடன் பாரம்பரியம் கொண்ட மதுரை ஆதீனத்துக்கு எதிராக பதியப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ். கார்த்திகேயன், மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.