மதுரை: அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று நடைபெற்றது. இதற்காக வந்திருந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகை திருட்டு புகார் தொடர்பாக எனது சகோதரர் அஜித்குமாரை மட்டுமின்றி, என்னையும் போலீஸார் கடுமையாக தாக்கினர். போலீஸாரின் தாக்குதலால் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், எனக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தமிழக அரசால் தற்போது எனக்கு காரைக்குடி ஆவினில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசு வேலை இல்லை. மேலும், ஆவின் அலுவலகம் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே, மதுரையிலேயே அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும். வளர்ச்சியடையாத பகுதியில் எங்களுக்கு வீட்டு மனை பட்டாவழங்கப்பட்டுள்ளது.
அதிலும் எங்களுக்கு திருப்தி இல்லை. அஜித்குமார் உயிரிழப்பில் சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, அஜித்குமார் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது “நவீன்குமாருக்கு வழங்கப்பட்ட ஆவின் பணி, அரசுப் பணியல்ல” என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “ஆவின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம்தான்” என்றனர்.