ஊட்டி: மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து காட்டு யானை ஆவேசமாக தாக்கியதில் கார் சேதமடைந்தது. குழந்தையுடன் சென்ற தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டம் உள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீப நாட்களாக அந்த பகுதியில் 3 குட்டி யானைகள் அடங்கிய யானை கூட்டம் சுற்றித் திரிகிறது. இந்த யானை கூட்டம் கடந்த சில நாட்களாக அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழி மறிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். ஒரு சில சமயங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் அரசு பேருந்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
நேற்றுமுன்தினம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் பகுதியை சேர்ந்த தீபக்(35) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கெத்தைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மலைப்பாதையில் கூட்டத்துடன் சென்ற யானை ஒன்று பின்னோக்கி வந்து காரை வழிமறித்து ஆவேசமாக சத்தமிட்டவாறு தாக்கியது.
வனத்துறையினர் விசாரணை: கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து நொறுங்கி காருக்கு உள்ளேயும் வெளியேயும் விழுந்தன. ஒரு சில விநாடிகளில் இந்த சம்பவம் நடந்ததால், காருக்குள் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து சத்தம் போட்டனர். மேலும், அந்த நேரத்தில் பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் சத்தம் போட்டதால் யானை ஒரு வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், குழந்தையுடன் காரில் இருந்த தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து குந்தா வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.