சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் மாநாடு நடத்துவதற்கு பதிலாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
அதிமுகவை கைப்பற்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய சட்டப் போராட்டம் தொய்வடைந்து வரும் நிலையில், நம்பியிருந்த பாஜகவும் அவரை கைவிட்டது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனிடையே முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்தார்.
அண்மையில் சென்னை வேப்பேரியில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், செப்.4-ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப் போவதாக பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். தற்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், மாநாடு நடத்தும் திட்டத்தை பன்னீர்செல்வம் கைவி்ட்டுவிட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது.
இதுதொடர்பாக அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: ஓ.பன்னீர் செல்வம், மாவட்டம் அல்லது மண்டல வாரியாகச் சென்று மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாடு நடத்தும் திட்டம் இல்லை. இதில் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி விதிகளை பழனிசாமி மாற்றியது, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டது, நடத்தி வரும் சட்டப்போராட்டம், ஏன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார், மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு போதிய நிதியை கொடுக்காமல் நிறுத்தி வைத்தது உள்ளிட்டவை குறித்து விளக்க திட்டமிட்டுள்ளார். இவ்வாறு கூறினர்.