சென்னை: சம்ஸ்கிருத நிதி ஒதுக்கீடு குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பாஜக அரசு சம்ஸ்கிருதம் மற்றும் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான ஊடக செய்தியை சுட்டிக்காட்டி, போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சம்ஸ்கிருதத்துக்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
திமுக ஆட்சி மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் ஆதிகால வழக்கம். திமுகவின் தொடர்ச்சியான இந்துமத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது.
உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு, ஏற்கெனவே பலமுறை விளக்கமளித்த மொழிவாரியான நிதி ஒதுக்கீடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். தமிழகத்தில் பல முறை ஆட்சியில் இருந்தும், மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, அண்டை மாநிலங்களில் புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக. யார் உங்களைத் தடுத்தார்கள்?
அவர்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006- 2014, 8 ஆண்டுகளில் கூட்டணியில் மத்திய அரசு சம்ஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.675.36 கோடி. தமிழுக்கு வெறும் ரூ.75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள். கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை, சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.11.68 கோடி செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.