மதுரை: அந்தகால திரைப்படங்களில் வன்முறை, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் ஆகியவை இருக்காது. ஆனால், தற்போது இதுபோன்ற காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி தெரிவித்துள்ளது.
மதுரை கைத்தறி நகரில் மதுபான கடை திறக்க தடை விதிக்க கோரி, மேகலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது, நடந்த வாதம்:
நீதிபதிகள்: அரசு ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அதிகரித்து வருகிறது. அரசின் கொள்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன. ஆன்லைன் ரம்மி விளையாட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, டாஸ்மாக் கடை விவகாரத்தில் வேறு மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
அந்தகால திரைப்படங்களில் வன்முறை, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் ஆகியவை இருக்காது. ஆனால், தற்போது இதுபோன்ற காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை. மதுக்கடையை அரசே நடத்த வேண்டிய அவசியம் என்ன? அது அரசின் பணி இல்லையே. அரசு எடுத்து நடத்துவதற்கு ஏராளமான தொழில் சார்ந்த நிறுவனங்கள் இருக்கும்போது, டாஸ்மாக் கடையை ஏன் நடத்த வேண்டும்? ஊழல், சட்டவிரோதம், குற்ற சம்பவங்களுக்கு மது காரணமாக அமைகிறது. டாஸ்மாக் மது, ஆன்லைன் ரம்மி இரண்டுமே கொலை செய்யக்கூடியவை. டாஸ்மாக் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?
அரசு தரப்பு: மது அருந்துவதை அரசு ஒருபோதும் ஊக்குவிப்பது இல்லை.
நீதிபதிகள்: அப்படி என்றால், எதற்காக மது விற்க வேண்டும்? மதுக்கடைகள் மூடப்படும் என்று ஒவ்வொரு கட்சியினரும் கூறுகின்றனர். ஆனால், யாரும் அதை செய்வதில்லை.
அரசு தரப்பு: மதுக்கடைகளின் எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்கப்படாது. கடைகள் படிப்படியாக மூடப்படும்.
நீதிபதிகள்: மூடப்படும் டாஸ்மாக் கடைகள் மூடியபடியே இருக்கலாமே. ஏன் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்?
வேலைவாய்ப்பு, கல்வி, பொது நலன் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி, நல்லதை மட்டுமே செய்ய வேண்டும். மனு தொடர்பாக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரம் தள்ளிவைத்தனர்.