விருதுநகர்: கடந்த ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம், இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. கருணாநிதியின் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்று சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறினார். விருதுநகர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதியம், வாரிசு வேலை, ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 19-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை 9 ஆண்டுகளுக்குப் பின்னரும் கொடுக்க மனமில்லாமல் இருப்பது நியாயமற்றது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 9 ஆண்டுகளாக பஞ்சப்படி வழங்கப்படவில்லை.
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். கடந்த ஆட்சியில் தொடங்கிய அவலம் இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. இதனால்தான் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒப்பந்தத்தில் சிஐடியு கையெழுத்திடவில்லை. தொழிலாளர்களுக்கு தரவேண்டிய ரூ.500 கோடியை தர முடியாது எனக் கூறிவிட்டார்கள்.
அதிகப்படியான ஒப்பந்த தொழிலாளர்கள், எலெக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் பணிமனைகளை தனியார்மயமாக்கும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தனியார்மயமாதல் காரணமாக பொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு இல்லாமல் சமூக நீதி அழிக்கப்படுகிறது.
அரசை எதிர்த்து போராட்டம்:
திமுக மற்றும் கருணாநிதியின் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணவில்லை என்றால் அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தை கொண்டுசெல்வோம். மக்கள் பிரச்சினைகளுக்காக திமுக அரசை எதிர்த்து கடுமையாக போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.