சென்னை: தமிழகத்தில் 4 மண்டலங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் அறிவித்துள்ளது.
போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்டவற்றைச் சார்ந்த பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதம் தோறும் கடன் மனுக்கள் பெறப்பட்டு, கடன் தொகை வழங்குவது வழக்கம். இந்நிலையில் 4 மண்டலங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாத நிலை இருப்பதாக கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தினர் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்கள் உறுப்பினர்களின் கடனுக்கான தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்து, மாத தவணை தொகையை 9 மாத காலமாக சங்கத்துக்கு செலுத்தாமல் ரூ.15.26 கோடி அளவில் நிலுவை வைத்துள்ளன.
எனவே, விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு சங்கத்தின் மூலம் கடன் வழங்குவது மற்றும் சங்க கணக்கை முடிப்பது ஆகியன தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பிடித்தம் செய்த தொகையை போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து வசூலிக்க சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.