மதுரை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பணியாற்றியபோது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்ளிட்டோர் சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, பொன் மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர்பாட்சா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டது. அதன்பேரில், அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதற்கிடையே, தன் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை தனக்கு வழங்க உத்தரவிடுமாறும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரருக்கு எதிராக சிபிஐ பதிவுசெய்த குற்றச்சாட்டில் போதுமான தகவல்கள் இல்லை. எனவே, அவர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இதனால், முதல் தகவல் அறிக்கையும் தேவையில்லாதது.
சிலை திருட்டு தொடர்பான வழக்குகளில் சிறப்புக் குழு எடுத்த முயற்சியை சீர்குலைக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது. முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை ஆகிய இரண்டும் மனுதாரருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்த எந்த ஆதாரங்களையும் வெளிப்படுத்தவில்லை.
இதுபோன்ற ஆதாரமற்ற குற்றப்பத்திரிகைகளை அனுமதிக்கும்பட்சத்தில். ஒவ்வொரு வழக்கையும் விசாரிக்கும் அதிகாரிக்கு எதிராக ஒரு கும்பல் கிளம்பும். விசாரணைக் குழுவினர் சேகரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தகவல்களை அந்த கும்பல் அழிக்க முயற்சிக்கும். இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கு, நிச்சயமாக நீதியின் நலனைப் பாதிக்கும்.
மனுதாரர் மீது புகார் அளித்தவருக்கு எதிரான வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும்போது மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்ததும், அதன்பேரில் குற்றப்பத்திரிகையை கீழமை நீதிமன்றத்தில்தாக்கல் செய்ததும் ஏற்புடையதல்ல. எனவே, பொன் மாணிக்கவேல் மீது பதிவான வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.